Tuesday 22 March 2016

பெரியார் பட்டம் குறித்து - மீனாம்பாள் சிவராஜ் அவர்களுடன்... ஒரு நேர்முகப் பேட்டி


அன்னை மீனாம்பாள்


அன்னை மீனாம்பாள் அவர்கள் இந்திய அளவில் அறியப்பட்ட பெண்ணியத் தலைவர். இவரது கணவர் ந.சிவராஜ் அவர்கள் இந்திய குடியரசுக் கட்சியின் அகில இந்தியத் தலைவர். டாக்டர் அம்பேத்கருக்குப் பிறகு மக்களை வழிநடத்தியவர். அன்னை மீனாம்பாள் அவர்களின் பேட்டி ஒன்று இங்கே இடம் பெறுகிறது. நீதி கட்சி பவளவிழா மலரின் இடம் பெற்ற அந்தப் பேட்டியில் இரண்டு முக்கியமான நிகழ்வுகளை விளக்குகிறார். 1. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், 2. ஈ.வெ.ராமசாமி அவர்கள் பெரியார் பட்டம் பெற்று அது முதல் பெரியார் என அழைக்கப்பட்ட வரலாறு. வாசகர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.                      -கௌதம சன்னா



1902ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 26ஆம் நாள் இரங்கூனில் பிறந்த மீனாம்பாம் சிவராஜ் அவர்கள், கண் பார்வையற்ற நிலையிலும் இன்றும்கூட பழைய செய்திகளை நினைவாற்றலுடன் கூறுவதில் திறமை உடையவராக இருக்கிறார்கள் என்பதை 6.11.90 அன்று அவரை சென்னை டிரான்சன் கார்டன் தெருவில் உள்ள (கெல்லீஸ்) அவரது இல்லத்தில் சந்தித்தபோது தெளிவாக உணர முடிந்தது.


காவல்துறையில் துணை ஆணையாளராக பதவியாற்றி ஓய்வுபெற்ற அவரது மகன் தயாசங்கர் இல்லத்தில்தான் மூதாட்டியார் அவர்கள் இருந்து வருகிறார்கள். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்துடன் துவக்கத்தில் தொடர்பு கொண்டு உயிரோடு இருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுள் ஒருவராக இருக்கக்கூடியவர் என்பதால், நீதிக்கட்சி பவள விழா மலரில் அவரை  நேர்முகமாக கண்டு பழைய நினைவுகளை புதிய தலைமுறையினரின் வெளிச்சத்துக்குக் கொண்டுவர  வேண்டும் என்ற அவாவில் அவரைச் சந்தித்தோம். திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றனுடன் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வி.எம்.நாராயணன், எஸ்ரே கருணாகரன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். 

கேள்வி: தங்களுக்கும் நீதிக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் தொடர்பு எப்படி ஏற்பட்டது?

பதில்: என்னுடைய பெரியப்பா வேணுகோபால் பிள்ளை இந்த இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர். கடப்பையில் நகராட்சி ஆணையாளராகப் பணிபுரிந்தவர். சென்னை ஸ்பர்டாங் சாலையில் டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய உரை புகழ்பெற்ற ஒன்றாகும். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே இவர்தான். இந்த முறையிலே எங்கள் குடும்பத் தொடர்பு நீதிக்கட்சியோடு இருந்தது.

ஒரு நாள் சி.டி.நாயகம் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது ராஜாஜி பிரதமராக இந்தியைத் திணித்த சமயம். பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் இந்தி திணிக்கப்படுகிறது. இதனை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், வரும் காலத்தில் நம் பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நாம் பெரியாரோடு சேர்ந்து கொண்டு ஏதாவது செய்தாக வேண்டும் என்று கூறினார்.
எனது துணைவர் சிவராஜ் அவர்கள் யோசிக்கலாம் என்றார். நான் திருமணம் ஆனபுதுசு. அப்பொழுது சட்டென்று சொன்னேன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது? தீவிரமாக இந்தியை எதிர்க்கத்தான் வேண்டும் என்று சொன்னேன். குழந்தை சொல்லுது; சரி என்று சொல்லுங்கள் என்றார் சி.டி.நாயகம்.

பேட்டியின் முதல் பக்கம்
முதலில் சென்னை தியாகராயர் நகரில் பொதுக்கூட்டம் ஏற்பாடாயிற்று. அந்த கூட்டத்தை சுமங்கலிதான் துவக்கிவைக்க வேண்டும் என்றார் சி.டி.நாயகம். அந்த முறையிலே முதன் முறையாக நான் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் அது. பெண் ஒருவர் பேசுகிறார் என்றவுடன் ஆச்சரியத்துடன் கூடினார்கள். ஏனென்றால், அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதோ பேசுவதோ மிகவும் அதிசயம்.

அடுத்து இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் உள்ள பெரிய மைதானத்தில் எனது தலைமையில் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டம். இந்தியை எதிர்த்துத் தீர்மானம் போடப்பட்டது.  அந்தத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டு பிரதமர் ராஜாஜியைச் சந்திக்கச் சென்றார்கள். நான் நல்ல எண்ணத்தோடு தான் இந்தியைக் கொண்டு வந்திருக்கிறேன், சுதந்திரம் வந்தால் இந்தியாவுக்குப் பொது மொழி இந்திதான். இதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று ராஜாஜி பதில் கூறி அனுப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து நாட்டில் ஏராளமான அளவில் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டங்கள் நடக்கத் தொடங்கின. மீர்சாப்பேட்டை, தேனாம்பேட்டை என்று பரவியது.

ஒருநாள் கி.ஆ.பெ.விசுவநாதம் இராயப்பேட்டை ஆண்டியப்பத் தெருவில் உள்ள (கதவு எண்.12) எங்கள் வீட்டுக்கு வந்தார்., அவருடன் ஸ்டாலின் செகதீசன் என்பவரையும் அழைத்து வந்தார். இந்தியை எதிர்த்து எங்கள் வீட்டிலேயே ஸ்டாலின் செகதீசன் என்பவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ஏராளமான பொதுமக்களும் பிரமுகர்களும் எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள்.

சென்னைக் கடற்கரையில் பெரியார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. பெரியாரைக் கைது செய்விட்டார்கள். பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமியையும் கைது செய்துவிட்டார்கள். அந்த நேரத்தில் நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன். ராஜாஜி என்னைக் கைது செய்யவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காலகட்டத்தில் வெள்ளைக்காரர்கள் வீட்டில் எல்லாம் சமையல்காரர்களாக (பட்லர்) பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் ராஜாஜியிடம் சென்று, மீனாம்பாள் அம்மாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் கைது செய்யக்கூடாது; மீறி கைது செய்தால் நாங்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்று கூறிவிட்டார்கள். ராஜாஜியும் எப்படியோ என்னைக் கைது செய்யவேண்டாம் என்று கூறிவிட்டார்.

கேள்வி: தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தாங்கள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பணி என்ன?

பதில் : அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர் அமைப்புக்கு “கிறீறீ மிஸீபீவீணீ ஷிநீலீமீபீuறீமீபீ சிணீstமீ திமீபீமீக்ஷீணீtவீஷீஸீ” என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பல மாநிலங்களில் எம்.சி.ராஜா அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். உத்திரப்பிரதேசம், வங்காளம் போன்ற இடங்களில் எம்.சி.ராஜா அவர்களைத் தேர்ந்தெடுத்தனர். மத்தியப் பிரதேசத்தில் டாக்டர் அம்பேத்கரைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பேட்டியின் இரண்டாம் பக்கம்

சென்னையிலே மாநாடு கூட்டி டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எம்.சி.ராஜா எங்களுக்கெல்லாம் ஒரு வகையில் உறவினர். உறவினர்கள் எல்லாம் என்னிடம் வந்து உறவுக்காரர் என்றுகூடப் பார்க்கலாம். இப்படி  செய்கிறீர்களே என்றார்கள். நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்கவேண்டுமா? சொந்தபந்தத்தைப் பார்க்கவேண்டுமா? என்று திருப்பிக்கேட்டார்.

மாநாடு எங்கு நடத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது சென்னை “அய்லாண்டு திடலில் நீதிக்கட்சியின் மாநாடு” நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது 1919 திசம்பர் மாதத்தில் அந்த மாநாட்டுப் பந்தலில் ஒரு குறிப்பிட்ட நேரம் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு அளித்தார்கள். நீதிக்கட்சி மாநாட்டின் செயலாளராக இருந்த சுந்தர்ராவ் நாயுடு இந்த உதவியைச் செய்ய முன்வந்தார்.

அந்தக் காலத்தில் பணத்துக்குப் பெருங்கஷ்டம், நான் போட்டிருந்த நான்கு பவுன் வளையல்களை அடமானம் வைத்து மற்ற செலவுகளைச் செய்தோம். இரண்டு மூன்று மணிநேரத்துக்குள்ளாகவே சுவரொட்டி அச்சிட்டு ஒட்டி மாநாட்டை சிறப்பாக நடத்திவிட்டோம். மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தலைவராக தேர்ந்தெடுத்து தீர்மானத்தை அம்பேத்கர் அவர்களுக்கே அனுப்பிவைத்தோம்.

தந்தை என் சிவராஜ்
ஆனால், அம்பேத்கர் அவர்கள் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். “நான் கோபக்காரன், எனக்கு இந்தப் பதவி எல்லாம் ஒத்துவராது நீயே இரு” என்று கூறி எனது கணவர் சிவராஜ் அவர்களை தலைவராக நியமித்தார்.

நாக்பூரில் மாநாடு நடத்தி சிவராஜ் அவர்கள் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவரே டாக்டர் அம்பேத்கர் அவர்கள்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் அகில இந்திய அமைப்பின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டது அப்பொழுது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.

கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.

பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர்கள் கலந்துகொண்ட திருமணங்களிலும் கலந்துகொண்டு பேசி இருக்கிறேன்.

சென்னை, பெரம்பூரில் என் தலைமையிலும், பெரியார் தலைமையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி.. ஒரே சேறும் சகதியுமாகிவிட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச் சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப்போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்கமாட்டார்.

நான், நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்மாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள்; நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா.அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அப்பொழுதுதான் ‘பெரியார்’ என்று அழைப்பது என்ற முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு கூட்டி ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்தோம். அதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக தன் வாழ்நாளில் நான் கருதுகின்றேன்.
கேள்வி : வேறு முக்கிய நிகழ்ச்சிகள்...

பேட்டியின் மூன்றாம் பக்கம்
பதில்: நான் எனது கணவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் உள்ள அம்பேத்கர் அவர்கள் வீட்டுச் சென்று இருக்கிறேன். அவரே சமையல் செய்து எங்களுக்கு விருந்து பரிமாறிய நிகழ்ச்சி மறக்கமுடியாத ஒன்று.

சென்னைக்கு வேல்ஸ் இளவரசர் வந்தபோது, எங்களுக்குத் தனி அழைப்புக் கொடுக்கப்பட்டு, அந்த விருந்தில் கலந்துகொண்டோம்.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழக செனட் உறுப்பினராக இருந்திருக்கின்றேன். கவுரவ மாஜிஸ்ட்ரேட் போன்ற பொறுப்புகளில் இருந்திருக்கின்றேன். இரங்கூனில் எனது பாட்டனார் மதுரைப்பிள்ளை பிரபல ‘வணிகர் விக்டோரியா’, ‘மதுரை மீனாட்சி’ என்கிற இரண்டு லாஞ்சுகள் அவருக்குச் சொந்தமானவை. இண்டர்மீடியட் படித்துவிட்டுத் திருமணத்துக்காக 16வது வயதில் சென்னைக்கு வந்தேன். எனது கணவர் சிவராஜ் எனது அத்தைமகன் ஆவார். அந்தக் காலத்திலேயே வக்கீலுக்குப் படித்தவர். அப்பொழுதெல்லாம் இந்த சமுதாயத்தில் இவ்வளவு தூரம் படித்தவர்கள் மிகவும் குறைவு. அம்பேத்கர் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக சட்ட உதவிகள் செய்வார்.

(பழைய நினைவுகளைப் பசுமை மாறாமல் எடுத்துச்சொன்ன மூதாட்டியாருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்று வந்தோம்)

நன்றி : நீதிகட்சி பவளவிழா மலர் - 1992

No comments:

Post a Comment